Friday 3 February 2012

ராய்!

இன்று வாரக் கடைசி விடுமுறை என்பதால், கண், கை, மனம் போன போக்கில் முகநூலில் பொறுக்கிக் கொண்டிருந்தேன். யாரோ அறிமுகம் இல்லாத ஒருவரின் ப்ரொபைல் படம் பார்த்தேன்.  உலக அழகி ஐஸ்வர்யா ராயின் படம்.  நிச்சயமாக அது உ.அ.ஐ.ராயின் முகநூல் பக்கம் இல்லை. அதன் உரிமையாளர் பெயர் எதோ கோமங்கோ காஸ்மாஸ் என்று இருந்தது (அவர் ஆணா பெண்ணா என்று கூட தெரியவில்லை, தெரிந்து கொள்ள விருப்பமும் வரவில்லை).

எனக்கு புரிபடாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று.  பிரபலங்களின் படங்களை ஏன் தங்கள் அடையாளப்படமாக போட்டுக்கொள்கிறார்கள்? யோசித்ததில் இதற்கான காரணம் ஒன்றல்ல மூன்று சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று தோன்றியது – ஒன்று - அந்த பிரபலத்தின் தீவிர ரசிகராக இருக்க வேண்டும்.  இரண்டு - (அழகாக இல்லை என்று அவரே நினைத்துக் கொண்டு) தன் முகத்தை காட்ட விருப்பம் இல்லாதவராக இருக்க வேண்டும்.  மூன்று - தேவை இல்லாத வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று கருதுபவர்களாக இருக்க வேண்டும் (குறிப்பாக பெண்கள்).  மூன்றாவது கருத்தில் ஒரு நியாயம் இருப்பதாக பட்டாலும், என்னோட முதல் இரண்டு வாதங்களும் ஒரு காரணமாக இருக்குமானால் அது எனக்கு சரியாகப் படவில்லை.

சரி..  ஐஸ்வர்யா ராய்... பிரகாஷ் ராய்.. அருந்ததி ராய்..என்று ராய்களை அடுக்கி ஆ’ராய’த் தொடங்கினேன். ராய் என்றால் இந்தியில் கருத்து (opinion) என்றும் கடுகு என்று இன்னொரு  பொருளும் உண்டு. (கடுகை ரய் என்று சொல்பவர்களும் உண்டு). தெலுங்கில் ‘கல்’ மற்றும் ‘எழுது’ என்றும் பொருள் கொண்டது ராய், தமிழில் யோசித்து பார்த்ததில் “வாராய்”.. “பாராய்”... என்று சில வார்த்தைகளே பலஹீனமாய் வந்ததால் ரொம்ப தூரம் போக முடியவில்லை...


லாலா லஜ்பத் ராய் (தலைப்புக்கு ஏற்ப இனி ராய் என்றே இவரை அழைப்போம்) 28 ஜனவரி 1865-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் பிறந்தார். சிறு வயது முதல் இந்து மதத்திலும் மனு தர்மத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.  இந்துக்களும் முஸ்லிம்களும் அடித்து கொண்டிருந்த கால கட்டத்தில், இந்து மதம் மேம்பட்டால் தான் (இன்றைய  பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை அடங்கிய) அன்றைய இந்தியா அமைதியாக இருக்கும் என்று நம்பினார்.  காங்கிரஸில் இருந்து கொண்டு, இந்து மஹா சபா (இந்த இயக்கத்தின் வழித்தோன்றல் தான் RSS எனப்படும் இந்து அமைப்பு) தலைவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டு தன் ஈடுபாட்டை காட்டியதால், பல காங்கிரஸ் தலைவர்களின் முகசுளிப்புக்கு ஆளானார் ராய்.  சில காலம் அமெரிக்காவில் தங்கிவிட்டு (முதல் உலக யுத்தம் நடந்த சமயத்தில்) இந்தியா வந்து 1920-ஆம் ஆண்டு காங்கிரஸில் தலைவர் பதவி ஏற்றார்.

வெள்ளையர்களின் ஆட்சி மில்லிமீட்டர் மில்லிமீட்டர்-ஆகா ஆனால் சர்வ நிச்சயமாக அவர்கள் கையை விட்டு நழுவிக் கொண்டிருந்த நேரம்.  சுய ஆட்சி எங்கள் பிறப்புரிமை என்று லால்-பால்-பால் (Lal-Bal-Pal) (நம்ம கதாநாயகர் ராய் - பால கங்காதர திலகர் - பிபின் சந்திர பால்) என்று அன்புடன் அழைக்கப்பட்ட மும்மூர்த்திகள் சிம்ம சொப்பனமாக வெள்ளையர்களின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருந்தார்கள்.

சுதந்திரமா? “சரி யோசிக்கிறோம்” என்று வெள்ளையர்களும் Government of India Act 1919  என்று கண் துடைப்பு ஒன்றை பிரகடப் படுத்திவிட்டு அதை தலைக்கு வைத்து நன்றாக குறட்டை விட்டு தூங்கினார்கள்.  அதில் இருந்த ஒரு ஷரத்தின் மூலம், 10 வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு (இந்தியாவிற்கு) சுயமாக ஆளும் தகுதி இருந்தால், அப்போது சுதந்திரம் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்போம் என்று நேரம் வாங்கினார்கள்.  ஆனால் அந்த சமயத்தில் இங்கிலாந்தில் கன்சர்வடிவ் கட்சி (ஆட்சியில் இருந்தது) அதன் எதிர் கட்சியான லேபர் கட்சியிடம் தேர்தலில் தோற்றுவிடும் அபாயம் இருந்தது.

இங்கிலாந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஏதாவது தடாலடி வேலை செய்தாக வேண்டும் (எல்லாம் வெள்ளை காரன் கிட்டே இருந்து கத்துண்டது தான்.. புரியுதா?) என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்து, இந்தியாவிருக்கு பூரண சுதந்திரம் கொடுக்கும் ஐடியா எல்லாம் இல்லை, வேண்டுமானால் இந்தியர் ஒருவர் ஆட்சி செய்யட்டும் ஆனால் மற்றபடி முழு கண்ட்ரோல் எங்கள் கையில் தான் இருக்கும்.  குழாயில் தண்ணி வரவில்லை, குப்பை அள்ளவில்லை இது போன்ற விஷயங்களை நீங்கள் நிர்வகித்துக் கொள்ளுங்கள், ஆனால் மக்களின் விதியை தீர்மானிக்கும் எந்த ஒரு விஷயமும் எங்கள் கையில் தான் இருக்கும் என்று ஒரு ப்ரோபோசல் செய்தது அந்த அரசு. இதை செயல் படுத்த ஏழு இங்கிலாந்து எம்பிக்கள் கொண்ட ஒரு குழு, சர். ஜான் சைமன் என்பவரின் தலைமையில் இந்தியா வந்தது. இதில் அங்கம் வகித்த அட்லீ என்பவர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமர் ஆனார்.

பிப்ரவரி 3, 1928 - பம்பாயில் இறங்கிய இந்த குழுவை “கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு”-என்று அவர்களே கோரஸாக பாடும் அளவுக்கு மக்கள் கறுப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அன்றைய இந்தியாவின் மக்கள் தொகை கணக்கில் 50,000 பேர் ஒன்று கூடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் குழுவில் ஒரு இந்தியருக்கு கூட இடம் இல்லையா என்று மக்கள் கொதித்து எழுந்தனர்.  அப்போதிருந்த காங்கிரஸ் 1927-ஆம் ஆண்டு மெட்ராஸில் (இன்று தான் அது சென்னை, அன்று மெட்ராஸ்தான்) சைமன் கமிஷனை புறக்கணிக்க தீர்மானம் போட்டு, அன்றைய மாநில தலைமை செயலர்  லார்ட்.பிர்கேன்ஹெட் (Birkenhead) அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “நாட்டம.. சைமன் கமிஷன் விதியை மாத்து - எங்களையும் சேர்த்துக்கோ” என்றது.  முஸ்லிம் லீகின் ஒரு பிரிவும் காங்கிரஸ்-க்கு ஆதரவு தெரிவித்தது.  சரின்னு அன்றைய வைஸ்ராய் (அட! இங்கேயும் ஒரு ராய்) லார்ட் இர்வினால் பொறுக்கி தேர்ந்தெடுக்கப் பட்ட 9 பேர் கொண்ட இந்தியக் குழு ஒன்றையும் இந்த சைமன் கமிஷன் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டது.  இதில் உஷாராக இருந்தவர்களுக்கு “சர்” பட்டமும் கொஞ்சம் ஏமார்ந்தவங்களுக்கு அடுத்த படியாக “ராவ் பகதூர்” பட்டமும் லஞ்சமாக கொடுத்து, இந்த இந்தியக்குழு வெள்ளையர்களை ரொம்ப மிரட்டாம பார்த்துக் கொண்டது வெ.கார அரசு.

இது ஒரு பக்கம் இருக்க, பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகவே பிரிட்டிஷ் அரசு பாவித்தது. பர்மாவுக்கு இது பிடிக்கவில்லை (இந்து சாஸ்திரத்தின் படி ஒருவன் நாட்டை விட்டு கடல் கடந்தது வெளியே போகக்கூடாது.  பர்மாவுக்கு டெபுடேஷன்-ல போக சொன்ன இந்திய போர் வீரர்கள் இந்த தர்மத்தை ஒரு சாக்காக சொல்லி போக மறுத்தார்கள். அதனால் தான் பர்மாவும் இந்தியாவின் ஒரு பகுதி என்று பி.அரசு அறிவித்து அவர்களை போகச்சொல்லி சமாதானப் படுத்தியது என்பது குட்டி பெட்டி செய்தி).  இந்த பிரகடனத்தை எதிர்த்து சாயா சான் (Saya San) என்பவர் பர்மாவில் கிளர்ச்சி செய்து அவர் பங்கிற்கு பி.அரசுக்கு தலை வலி கொடுத்தார்.

இதற்கிடையில் செப்டம்பர் 1928 மோத்தி லால் நேரு ஒரு இந்திய அரசு இப்படித்தான் இயங்க வேண்டும் என்று ஒரு 17 வால்யூம் கொண்ட சாசனம் ஒன்றை வரைந்து வெள்ளை காரர்களை மேலும் கடுப்பேத்தினார்.  ராய், இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த இடத்தில் எல்லாம் இந்த சாசனத்தின் புகழ் பரப்பினார். “பிரிட்டிஷ் அரசு என்ன செய்தாலும் அவர்கள் பார்வையில் நாம் அடிமைகள் தான்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும்... (1919-இல் ஒரு பெரும் நோய் ஆறு கோடி இந்தியர்களை கொன்றது. ஸ்பானிஷ் ஃபுளு, பிரெஞ்சு ஃபுளு, மூன்று நாள் ஜுரம் என்று பல பெயர் கொண்ட இந்த சுவாச நோய், பிரிட்டிஷ் வீரர்கள் மூலமாக இந்தியா வந்தது) நோய் வந்த போது கவலை படாத இந்த அரசா உங்களை ஆளவேண்டும்?” பத்து கோடி இந்தியர்கள் உண்ண உணவில்லாமல் இருக்கிறார்கள்.. இதைப்பற்றி கவலை படாத அரசா உங்களை ஆள வேண்டும்? வெள்ளையர்கள் துப்பாக்கி தும்மலுக்கு துவண்டு விடாதீர்கள் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டினார் ராய்.

கடைசியாக அக்டோபர் மாதம் 30ஆம் தேதி 1928 சைமன் கமிஷன் லாகூர் வந்த பொழுது ராய் தலைமையில் அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது.  எங்கு பார்த்தாலும் கறுப்பு கொடி ஆரவாரம். பார்த்து கடுப்பாகிப்போன ஸ்காட் என்ற போலீஸ் அதிகாரி லத்தி அடிக்கு உத்திரவு போட்டார்.  போட்டார் என்ன.. போட்டான்.  சாண்டர்ஸ் என்ற அடுத்த கீழ் போலீஸ் அதிகாரி ராயை குறிப்பாக நோக்கி தன் லத்தியை சுழற்றினான்.  அப்பவும், சுகதேவ், யஷ்பால், பகவதி சரண் போன்ற ராயின் நண்பர்கள் அவருக்கு பாடி கார்டாக இருந்து அவரை சூழ்ந்து முடிந்தவரையில் பாதுகாத்தார்கள். அவர்களும் எவ்வளவு அடி தான் தாங்குவார்கள்? நிலை குலைந்து அவர்கள் கீழே விழுந்தவுடன் சாண்டர்ஸ்-இன் லத்தி ராயை இந்த இடம் தான் இல்லை என்பதில்லாமல் தலை, மார்பு, கை, கால், இடுப்பு என்று வெறித்தனமாக பதம் பார்த்தது.  கொட்டும் குருதியிலும், உடல் வலியிலும் ராய் நிதானம் இழக்கவில்லை.  கூட்டத்தை அமைதியாக கலைந்து போகுமாறு சொனார்.  கூட்டம் விலகியதும் அதிகாரி ஸ்காட்-கு அவனுக்கு புரியும்படி ஆங்கிலத்தில் சொன்னார் "The blows, which fell on me today, are the last nails driven into the coffin of British Imperialism." ஆனால் சாண்டர்ஸ்-இன் லத்தி அடி அளவுக்கு மீறி அவரை சேதப்படுத்தி விட்டது. இந்த அடியின் தாக்கம் காரணமாக நவம்பர் 17, 1928 மாரடைப்பால் – பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதி ராய் காலமானார்.

பின் கதை 1: தடியடிக்கு உத்தரவிட்ட மற்றும் அடித்த அந்த இரண்டு காவல் அதிகாரிகளையும் பிரிட்டிஷ் அரசு எதோ ஒப்புக்கு பதவியிலிருந்து சஸ்பென்ட் செய்து நியாயம் வழங்கியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டது. 

பின் கதை 2 : ராய் நிறுவிய கல்லூரியின் மாணவனாக இருந்த பகத்சிங், ராயின் இறப்புக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ராஜகுரு, சுக்தேவ், சந்திரசேகர ஆசாத் கூட்டணியில், ராய் இறந்த மூன்றாவது வாரத்தில், போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ்-ஐ சுட்டுக் கொன்று தலை மறைவானர்கள்.  ஆக்சுவலாக தடியடி உத்தரவு பிறப்பித்த மேல் அதிகாரி  ஸ்காட் கொல்லப்படாமல் தப்பித்தது அவனது மனைவியின் தாலி, சாரி மோதிர பாக்கியமே!

கடைசி கதை 3 : இன்று, பிப்பரவரி  3 – சைமன் கமிஷனுக்கு முதல் முதலாய் கறுப்பு கொடி காட்டிய நாள்..வருடம் தான் வேறு. ஜெய் ஹிந்த்!

1 comment:

  1. wonderfull posting..lala lajpat rai ei pattri migavum arumaiyana theriyatha pala vishayangalai pagirnthatharku nanri ...

    ReplyDelete